இந்தியாவின் பொருளாதாரம் 5 சதவீதத்துக்கு குறைவான வளர்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருப்பதாக புதிய கணிப்புகள் தெரிவிக்கின்றன.
பாரத் ஸ்டேட் வங்கி, நொமுரா ஹோல்டிங்ஸ் இங்க் மற்றும் கேபிடஸ் எகனாமிக்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் பொருளாதார ஆலோசகர்கள் கணிப்பின் படி, கடந்த செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.2 சதவீதத்தில் இருந்து 4.7 சதவீதம் வரையில் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. இதன் அதிகாரப்பூர்வ தரவுகளை வரும் நவம்பர் 29-ஆம் தேதி மத்திய அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2012 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி தரவுகளுக்கான புதிய அடிப்படை ஆண்டு உருவாக்கப்பட்டது. அதில் இருந்து, 4.2 சதவீத வளர்ச்சி என்பது மிகக் குறைவானதாகும். கடந்த ஜூன் மாதம் முதல் மூன்று மாதங்களில் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக விரிவடைந்தது.
சிங்கப்பூரின் நொமுரா நிறுவனத்தின் இந்தியா மற்றும் ஆசியாவின் தலைமை பொருளாதார நிபுணர் சோனல் வர்மா கணிப்புப்படி, கடந்த காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.2 சதவீதமாக உள்ளது. அதே போல், கேபிடல் எகனாமிக்ஸ் நிறுவனத்தின் மூத்த இந்திய பொருளாதார நிபுணர் ஷிலன் ஷா கணிப்புப்படி, கடந்த காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.7 சதவீதமாக உள்ளது.
இது குறித்து பாரத் ஸ்டேட் வங்கியின் தலைமை பொருளாதார ஆலோசகர் சவுமியா கந்தி கோஷ் கூறுகையில், "வரும் டிசம்பர் மாதத்தில் ரிசர்வ் வங்கியில் இருந்து பெரிய அளவில் வட்டி விகிதம் குறைக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். இருப்பினும், இத்தகைய வட்டி குறைப்பு எந்தவொரு உடனடி பொருள் மறுமலர்ச்சிக்கும் வழிவகுக்காது" என்று தெரிவித்தார். இவரின் பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்பும், சோனல் வர்மாவின் கணிப்புடன் பொருந்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.